நான்கு புனித தலங்கள் (தேவநாகரி: छोटा चार धाम) என்பது இந்தியாவின் இமயமலையில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்களைக் குறிப்பதாகும்.ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பதை வடமொழியில் சார் தாம் யாத்திரை என்பர்.
திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.
இறைவன், இறைவி
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய புஜங்க சயனக் கோலத்தில் பரம புருஷன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பரிமளவல்லி நாச்சியார் தீர்த்தம் இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானசரோவரம் ஆகியன. விமானம் கோவர்த்தன விமானம் என்ற அமைப்பினைச் சார்ந்தது.
சிறப்புகள்
திருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.
தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால்பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
தல வரலாறு
தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.
தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது. இத்தலத்தில் வழிபாடியற்றுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.
REPORT THIS AD
இறைவன், இறைவி
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)எனவும் வேணி மாதவன் என்றும் அழைக்கப்படுகிறான். இறைவியின் பெயர் புண்டரீக வல்லி, விமலா என்பனவாகும். தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை ஆகியன. விமானம் மங்கள விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
சிறப்புகள்
பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் தான் கங்கை ஆறும் யமுனை ஆறும் கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும் சங்கமிக்கின்றன. மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது எனவே இங்கு வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும். இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள். ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.
