திருப்பார்த்தன் பள்ளி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு அருகிலும் திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று. பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.
தனியாக யாத்திரை மேற்கொண்ட அர்சுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தார். வனப்பகுதியில் தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது அகத்தியர் ஆசிரமம் சேர்ந்து, அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார்.ஆனால் அர்சுனனால் அருந்த இயலாதபடி நீர் மறையவே வருந்தி காரணம் வேண்ட, அகத்தியரும் ஞானதிருஷ்டி மூலம் காரணத்தைக் கண்டு தெரிவித்தார்.
பல்வேறு சோதனையிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது என்று கூற, அர்சுனன், கண்ணனை நினைத்து வேண்ட, அங்கு தரிசனம் தந்த கண்ணன், அர்சுனனின் கத்தியால் பூமியை கீறச்சொல்ல, அதிலிருந்து நீர் வந்தது. அத்தீர்த்த நீரைப் பருகி தாகம் தீர்ந்தான் அர்சுனன்.
அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே கண்ணன் தங்கிவிட்ட தலம் பார்த்தன்பள்ளி என்றாயிற்று.
இறைவன்- மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தாமரையாள் கேள்வன். இறைவி-தாமரை நாயகி, ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார். தீர்த்தம்-கட்க புஷ்கரணி. விமானம்-நாராயண விமானம்.
ஒரு சமயம் வருண பகவான் மன நிம்மதியின்றி தவித்த பொழுது மன அமைதி வேண்டுமானால் திருநாங்கூருக்கு அருகேயுள்ள திருப்பார்த்தன் பள்ளிக்குச் சென்று அங்குள்ள கங்கா தீர்த்தம் என்று அழைக்கப்படும். சங்க ஸரஸ் புஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கி தவம் செய்தார் மன நிம்மதி கிடைக்கும். யாராலும் எவராலும் எத்தனை பெரிய சக்தியினாலும் எக்காலத்திலும் இடையூறு இல்லாமல் பக்கத்திலிருந்து பார்த்தான் காப்பாற்றுவார் என்று சொன்னதின் பேரில் வருணன் இங்கு வந்து முறைப்படி பிரார்த்தனை செய்து மனநிம்மதியை பெற்றார். வருணனுக்கு அனுக்கிரகத்தை தந்தது போல பத்து வகை புத்திரர்களுக்கும் திருமால் தரிசனம் தந்து அவர்களது வாழ்க்கையை ஒளிவீச செய்தார்.
ஆரோக்கியம் குன்றியவர்கள், வியாபாரத்தில் நம்பி ஏமாந்து போனவர்கள், வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள் இளைஞிகள், வேலை கிடைக்கும் அதில் முன்னேற முடியாமல் அவதிப்படும் அலுவலக பணியாட்கள், குழந்தைகளினால் வெறுக்கப்பட்டு போக்கிடம் இல்லாமல் தனிப்பட்ட குழுவினர் துடிக்கும் வயதானவர்கள் ஆகியோர் இந்த தலத்திற்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தாள் கஷ்டங்கள் விலகி மன நிம்மதியோடு வாழ்நாட்களை கழிப்பார்கள்.தொடர்புக்கு: அர்ச்சகர் (சக்ரவர்த்தி – 9566931905)