அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.அங்காரகன் என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இந்து தொன்மவியலின்படி, இவர் ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார். இவர் பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். சோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய இராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.
ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இருவருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.
அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது
கோயில்- வைதீஸ்வரன் கோயில் (செவ்வாய் கோயில்- செவ்வாய்), நாகப்பட்டினம்.
உலோகம் – தாமிரம்
ரத்தினம் – பவளம்
நிறம் – சிவப்பு
மாற்றம் நேரம் – 45 நாட்கள்
அடையாளம்- கடகம்
மகாதோஷம் நீடிக்கும் நாள்- 7 ஆண்டுகள்
வீடு மனை வாங்கும் யோகத்தை அருளக்கூடியவர் செவ்வாய் பகவான் தான். செவ்வாய்தான், பூமிகாரகன். மனை வாங்கும் யோகத்தைத் தருபவனும் செவ்வாய்; வாழ்க்கைத் துணையை அருளுபவனும் செவ்வாய். எனவே செவ்வாய் பகவானை வழிபடவேண்டியது மிக மிக அவசியம்.
வீடு, மனை என்பதே சொத்துகள்தானே. ஒருவேளை பூர்வீகச் சொத்துகள் இருந்தால், அது சகோதர வகையில் இருப்பவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கவேண்டும் அல்லவா. அப்படிப் பிரித்துக் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாதெனில், சகோதரப் பாசமும் நேசமும் முக்கியம் அல்லவா. ஆகவே, சகோதர ஒற்றுமையையும் தந்தருளக்கூடியவர் செவ்வாய் பகவான்.