திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.
இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது.
அமிர்தத்தை தேவர்களுக்கு அளிக்க மோகினி அவதாரம் எடுத்த தலம், புராண கால வரலாறு கொண்ட கோவில், விஸ்வகர்மா எழுப்பிய கோவில், சங்க காலத்திலும், பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கிய தலம், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம், நின்ற, கிடந்த கோலம் கொண்ட திருக்கோவில், சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.
கிருத யுகத்தில் துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம்பெற்ற இந்திரன், விமோசனம் பெற்ற தலம், திருமோகூர் திருத்தலம் ஆகும். திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தைப் பருக அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதைத் தடுக்க விரும்பிய திருமால், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை திசை திருப்பி, தேவர்கள் அமிர்தம் பருக வழிவகுத்தார். இறைவன் மோகினி வடிவம் எடுத்த தலம் இது என்பதால், ‘மோகினியூர், மோகியூர், மோகன சேத்திரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது மோகூர் என்று வழங்கப்படுகிறது.
துவாபர யுகத்தின்போது, இந்தத் தலத்தில் புலஸ்தியருக்கு மோகினி வடிவில் இறைவன் காட்சி தந்து அருளியதாக புராண வரலாறு சொல்கிறது. இங்கு பிரம்மதேவன் தவம் இயற்றியதை பிரமாண்ட புராணத்தில் அறியமுடிகிறது. சங்க காலத்திலேயே இத்தலம் பழையன் என்ற சிற்றரசனின் ஊராகத் திகழ்ந்திருக்கிறது. மோரியர் படை மோகூரைத் தாக்கிய போது, பழையனுக்குத் துணையாக கோசர்கள் நின்று வெற்றி தேடித் தந்தனர். கி.பி. 8, 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடிப் பரவிய தலம் இது.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோவில் ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இடது புறம் மிகப்பெரிய திருப்பாற்கடல் தீர்த்தம். அதன் எதிரே, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் ஸ்ரீதேவி – பூதேவி சமேத காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், அனுமன், நவநீத கிருஷ்ணர் ஆகிய சன்னிதிகளைக் கொண்டுள்ளது. மூலவர் காளமேகப் பெருமாள் கருவறையைச் சுற்றி இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 46-வது தலமாக விளங்குகிறது. பாண்டியர்கள், விஜயநகர மன்னர், நாயக்கர்கள், மருதுபாண்டியர்கள் என பல்வேறு மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை வரலாறு கூறுகின்றது. பாண்டிய வளநாட்டில் தென்பகுதியில் அமைந்த ஊராக திருமோகூர் விளங்குகின்றது.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த தலம் இது. காளமேகப்புலவர் தனிப்பாடலில் புகழ்ந்துள்ளார். அஷ்ட பிரபந்தம் எனும் சிற்றிலக்கியம், அழகிய மணவாள தாசர் எனும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், வடமொழிப் புராணங்கள், பெரும் புலவர்கள் பாடல்கள் என இத்தலத்திற்கு எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் நிறைந்துள்ளன. இதுதவிர, திருமோகூர் புராணமும் இத்தலத்தைப் புகழ்கின்றது.
கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில் உயரமான வடிவில் காட்சியருள்கிறார், காளமேகப்பெருமாள். ரதி, மன்மதன், வில்லேந்திய ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரது சிலை வடிவங்கள் கருவறையைச் சுற்றி அமைந்துள்ளன. இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகிறார்.
பாடல் பெற்ற தலம்
நம்மாழ்வார் தமது முப்பத்தி இரண்டாவது வயதில் இருந்த இடத்தில் இருந்தே நூற்றியெட்டு திருப்பதிகளில் முப்பத்தாறு தலப் பெருமாளைப் பாடுகின்றார். அவர்களில் இத்தலத்து பெருமாள் மட்டுமே நம்மாழ்வரை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.
இத்தலத்து தாயார் மோகனவல்லி, விழாக் காலங்களில் கூட வீதி உலா வருவதில்லை. எனவே இந்த தாயாரை ‘படி தாண்டாப் பத்தினி’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.
பொதுவாக, பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதியில் திருமாலின் பாதத்தில் கைகளால் வருடும் நிலையில் திருமகள் காட்சியளிப்பார். ஆனால் இங்கு திருமகளும், பூமகளும் திருமாலின் பாதங்களுக்கு அருகே சிறு குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் காலை முன்புறமாக நீட்டி அமர்ந்திருப்பது அரிய கோலமாகும்.
வேண்டிய வரம் அருளும் நாதனாக, இத்தலத்தில் காளமேகப்பெருமாள் வீற்றிருக்கிறார். இருப்பினும் இங்குள்ள சக்கரத்தாழ்வாரே பக்தர்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கிறார். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். நோய்கள், ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை என அனைத்து இடர்களும் நீங்கும் என்பதால், இந்த சக்கரத்தாழ்வாரை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர். மந்திர எழுத்துக்களோடு காணப்படும் சக்கரத்தாழ்வார் இங்கு மட்டுமே இருக்கிறார். திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்: சக்கரத்தாழ்வார் சுதர்சனர் அம்சம் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே. சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது.
மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம். ஸ்தல பெருமைகள்: நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர்.
பெருமாள் மோகினி அவதாரம் எடுத்த தலம். மோகினி ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்தல புராணம்: தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோனவூர் என்றிருந்து பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர்: காளமேகப் பெருமாள்
பெருமை: திவ்ய தேசம்
உற்சவர்: ஸ்ரீஆப்தன்
தாயார்: மோகனவள்ளி
தலவிருட்சம்: வில்வம்
தீர்த்தம்: ஷீராப்தி
விமானம்: கேடகி
புராணப் பெயர்: மோகனபுரம்
அமைவிடம்
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில், மதுரை – மேலூர் சாலையில் ஒத்தக்கரையின் அருகே 1 கிலோமீட்டர் தொலைவில் திருமோகூர் உள்ளது. மதுரைக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.